Thursday 6 September 2012

ஆதிச்சநல்லூர் அகழாய்வும் தமிழர் பண்பாட்டுத் தொன்மையும்



ஆதிச்சநல்லூர் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியில் இருந்து  24 அயிர் மாத்திரி (கிலோ மீட்டர்) தொலைவில் தென்கிழக்கு திசையில் இடம் கொண்டுள்ளது. இவ்வூர் திருநெல்வேலி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் இடம் கொண்டுள்ளது. இத்தளம் அதற்கும் மேல் இதன் மேற்குப்புறத்தில் அமைந்த தாமிரபரணி ஆற்றுக் கரையில் இடம் கொண்டுள்ளது. இங்கு பேர் எண்ணிக்கையிலான  புதைகலன்கள் (முதுமக்கள் தாழிகள்) கண்டறியப்பட்டன. அங்கு முற்காலத்தே வாழ்ந்த மக்களுடையது எனும் பொருளில் இதனைத் தாழிக்காடு என்கின்றனர்.
 
தொல்லியல் அகழாய்வுகள் இந்தப் புதை தளத்தில் 1876, 1899, 1903, 1904 மற்றும் 1906 ஆகிய ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்டு உள்ளன.   பின்னர் 1914 ஆம் ஆண்டில் அயல்நாட்டவர் இங்கு தொல்லியல் அகழாய்வுகளை நிகழ்த்தினர். அண்மைக் காலத்தில், இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் (ASI) துறை இத்தளத்தில் 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் அகழாய்வுகளை நடத்தியது.
 
1914 ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுகள் 9,000 க்கு அதிகமான தொல்பொருள்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன.  அவற்றுள் தாழியிற் புதைத்தல் தொடர்பான மட்கலன்கள், பொன்னாலான பொருள்கள், செம்பு வடிவங்கள், முருகப் பெருமானின் மூன்று முனை வேல், தாய்த் தெய்வத்தின் மட்கல வடிவங்கள், தொங்கும் விளக்குகள், முதலாயவை அடங்கும். இங்கத்து மட்கலத் தொழிலில் கருப்புநிற மட்கலன், சிவப்புநிற மட்கலன், தென்னிந்திய இரும்புக் கால நாகரிகத்தின் தனிக்கூறான கருப்பு - சிவப்பு நிற மட்கலன் ஆகிய வகைகள் அடங்கும். 
 
அண்மைய (2004 மற்றும் 2005) அகழாய்வுகள் 150 க்கும் மேற்பட்ட புதைத்தல் கலன்களையும், கருப்பு - சிவப்பு நிற மற்றும் கருப்புநிற மட்கலன்களையும், செப்பு வளையல்கள், செம்புக் கோடாரிகள், இரும்பு வேல்கள் இவை தவிர, புதியகற்கால கற்கருவிகள் ஆகியனவற்றையும் மேற்பரப்பிற்கு கொண்டு வந்தன. சிறு அளவு நெல் உமியும், அரிசியும் தவசங்களும் அகழாய்வில் கண்டறியப்பட்டன. இங்கு கிடைத்த பானைஓடுகள் எழிலூட்டும் வேலைப்பாடுகளையும், கீரல்குறிகளையும் இவை தவிர, மூல தமிழ் எழுத்துகளையும் பெற்றிருந்தன. 
 
பேரெண்ணிக்கையில் வெண்கலத்தால் ஆன பொருள்களும்  புலி, எருமை, வெள்ளாடு, மான், சேவல் முதலாயவற்றை ஒத்த வடிவுகளும் முந்தைய அகழாய்வில் கண்டறியப்பட்டன.
 
மேற்சொன்ன பழம்பொருள், செம்பு மற்றும் வெண்கலப் பொருள்கள் தமிழ்நாட்டில் புதியகற்கால நாகரிகத்தைப் பின்தொடர்ந்து  வெண்கல மற்றும் செம்பு ஊழிகள் (ages) நிலைப்பட்டிருந்ததைச் சுட்டுகின்றது. 
 
இத்தளத்தின் கரியம் 14 (C 14) காலக்கணக்கீடு, அகழாய்வாளர் திரு. தியாக. சத்தியமூர்த்தியால் 1570 BCE  என பதிவு செய்யப்பட்டு உள்ளது. இத்தளமே காலத்தால் பழமையானது அதோடு, புதியகற்காலம், நுண்கற்காலம், இரும்புக் காலம், செம்பு - வெண்கலக் காலம் தவிர, இரும்புக் கால நாகரிகங்களின் சான்றெச்சங்களையும் உடையதாக நாம் அறியும் தளமும் இது ஒன்றே ஆகும். அதைமுன்னிட்டு, ஆதிச்சநல்லூர் மக்கள் எல்லா மாழைகளையும் (Metals) பயன்கொண்டனர், அவற்றின் பயன்பாட்டையும் அறிந்து இருந்தனர். இங்கு திரட்டிய மாழைப் (Metal) பொருள்கள், ஆதிச்சநல்லூர் விறுவிறுப்பான உள்நாட்டு வணிக நடுவமாகவும், நகரமாகவும் திகழ்ந்தது என்பதைச் சுட்டுகின்றன.
 
இத்தளத்தில் கண்டெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மட்கலத் தாழிகள், ஆதிச்சநல்லூர் மக்கள் நிரம்பிய நகரமாகவும், நாடறிந்த நகரமாகவும் செழிப்புற்று விளங்கியது என்ற உண்மையைப் புள்ளியிட்டு குறிப்பிடுகின்றது. கருப்பு - சிவப்புநிற மட்கலன்களுடன் கூடிய பழந் தமிழ் எழுத்துப் பொறிப்போடு உள்ள பானைஓடுகள் பிந்து அரப்பா நாகரிகமும் தமிழ் நாகரிகமும் ஒருமைப் பண்பு உடையன என்பதைச் சுட்டுகின்றன. இவற்றில் பிந்து அரப்பா தளங்களில் காணப்படும் கீரல்குறிகளை அதிகம் ஒத்த கீரல்குறிகளைக் கொண்ட பானைஓடுகளும் உள்ளன. 
 
ஆதலால், ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் நடு இந்தியாவில் காணப்படுவது போன்றே புதிய கற்காலத்தைப் பின்தொடர்ந்து வெண்கல - செம்புக் காலம் நிலைப்பட்டிருந்ததை வெளிப்படுத்தி உள்ளன. இந்த அகழாய்வுகள் தமிழ் நாகரிகமும் பிந்து அரப்பா நாகரிகமும் ஒன்றற்கு ஒன்று தொடர்புடையன என்பதை நிறுவி உள்ளன. 
 
இந்திய நாகரிகத்தின் தொடக்கம் குறித்து சூழ்ந்துள்ள புதிர்மறைவுச் செய்தியின் மடிப்பை அவிழ்க்க இத் தளத்தில் மேலும் அகழாய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும். இஃது அரப்பா மற்றும் தமிழ் நாகரிகத்தை இணைக்க, அதற்கான கால்வாய்களைத் திறந்துவிட்டுள்ளது.
 
 
இச்செய்திகளைத் தொகுத்து வழங்கியவர்:
பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி,
பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை,
சென்னைப் பல்கலைக் கழகம் (ஓய்வு).

0 comments:

Post a Comment

 
-